நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்கும் போது, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான சட்ட வல்லுநர்கள் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டிய சரத்துக்களை அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30/2 மற்றும் 62/2 ஆகிய சரத்துக்களே மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படும் சரத்துக்களாகும். இவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள். இவை சட்ட வல்லுநர்களாலும் அரசியலமைப்பு வல்லுநர்களாலும் உருவாக்கப்பட்டவை. எனவே, மேல் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது அந்த நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என இந்தச் சரத்துக்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.