எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் நேற்று(24.03.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்கு வழங்கப்பட்ட காசோலையொன்றைத் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தார் என்று சாமர சம்பத் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரு தரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.