ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்த இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் !
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்.
கியூபா குடியரசின் புதிய தூதுவர், கொழும்பைத் தளமாகக் கொண்ட கட்டார் இராச்சியத்தின் புதிய தூதுவர் மற்றும் புதுடில்லியைத் தளமாகக் கொண்ட ஸ்லோவேனியா குடியரசின் தூதுவர் ஆகியோரே இவ்வாறு தமது நற்சான்றிதழ்களைக் கையளித்துள்ளனர்.
அதற்கமைய, கொழும்பைத் தளமாகக் கொண்ட கியூபா குடியரசின் புதிய தூதுவராக பேட்ரிசியா லாசரா பெகோ குவேரா , கொழும்பைத் தளமாகக் கொண்ட கட்டார் இராச்சியத்தின் புதிய தூதுவராக ஹமத் மொஹமட் அப்துல்லா அல்-சனத் அல்-தோசாரி மற்றும் புதுடில்லியைத் தளமாகக் கொண்ட ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராக டோமாஸ் மென்சின் ஆகியோர் ஜனாதிபதியிடம் இன்று நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்.
நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், ஜனாதிபதி புதிய தூதுவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.