இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கடல் பகுதியில் வியாழக்கிழமை (5) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய இயந்திரப் படகு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் கடலில் மூழ்கியுள்ளது. கடற்கரையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள இப்படகினை மீட்கும் முயற்சியில் மீனவர்களும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
கனரக வாகனங்கள் மூலம் படகைக் கரைக்கு இழுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியைப் பெறவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்திற்கு இப்பகுதியில் நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடற்கரை நிலப்பரப்பு வேகமாக உள்வாங்கப்படுவதால், மீனவர்கள் ஓய்வெடுக்கும் இடங்களும், வலைகளைப் பழுதுபார்க்கும் நிழல் தரும் தென்னை மரங்களும் கடலரிப்பினால் அழிந்து வருகின்றன.
மீன்வாடிகள் இல்லாமை: உபகரணங்களைப் பாதுகாப்பாக வைக்க இடவசதி இல்லாததால், பல இலட்சம் ரூபாய் சொத்துக்கள் இயற்கை அனர்த்தங்களுக்கு இலக்காகின்றன.