இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளது.
இதனால் இன்று இரவு முதல் எதிர்வரும் 06.08.2026 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திற்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தற்போது மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 06.08.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும், பல பகுதிகளிலும் மண் நிரம்புநிலையை எட்டியுள்ளதனாலும் இம்மாகாணங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதனால் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மக்கள் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
மத்திய பசிபிக் பெருங்கடலில் மிக வலுவான எல்நினோ உருவாகிக் கொண்டுள்ளது. இன்றைய தினம் (02.08.2026) நினோ 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 2. 4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.
எல்நினோவின் தொலை இணைவு வடமேற்கு இந்து சமுத்திரப் பகுதியில் ஆப்பிரிக்காவுக்கு கிழக்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அது இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதி நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் (IOD) மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று (02.08.2026) இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்+0.66 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் எதிர்பார்த்ததற்கு மாறாக எல்நினோவின் உச்சம் முன்கூட்டியே அதாவது செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கும் என்பதோடு எல்நினோவின் உச்சம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எதிர்வரும் 2027 ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்நினோவின் காரணமான சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பும் இந்து சமுத்திர வெப்பச்சுட்டெணின் நேர்மறை(Positive) மற்றும் எதிர்மறை (Negative) மாற்றங்களும் இலஙகைக்கு இரண்டு வேறுபட்ட தீவிர வானிலைத் தோற்றப்பாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
1. செப்டெம்பரின் இறுதிப்பகுதி வரை வெப்ப அதிகரிப்பு காணப்படும். அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம் மற்றும் மிகக்குறைந்த மழை வீழ்ச்சி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு பெரும் நீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும்.
2. ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக அதிக தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இம்முறை இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதிகளில் குறைந்தது 06 தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இவற்றில் இரண்டு தாழமுக்கங்கள் புயல்களாக உருவாகும் வாய்ப்புள்ளன. ( இது ஒரு நீண்ட கால முன்னறிவிப்பு என்பதனால் இதில் மாற்றங்கள் நிகழக் கூடும்)
3. எனவே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகம் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 900 மி.மீ. இனை விட அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
4. ஆனால் தாழமுக்க செயற்பாட்டினாலேயே இம்மழை கிடைக்கும் என்பதனால் குறைந்த மழை நாட்களில் அதிக மழை கிடைக்கும். இதனால் வெள்ள அனர்த்தங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே நாம்….
1. அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம், மற்றும் குறைவான மழையினால் ஏற்படக்கூடிய மிக வரண்ட வானிலை மற்றும் வரட்சி,
2. தாழமுக்கங்கள்/ புயல்கள், குறுகிய நாட்களில் கிடைக்கும் கனமழை, காரணமாக ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள்
என இரண்டு விடயங்களுக்கும் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.
குறிப்பாக ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக வங்காள விரிகுடாவில் இந்து சமுத்திரத்தின் சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் என்ற அளவில் காணப்படுவதுண்டு. இது அதிகரிக்கும் போது தாழமுக்கங்கள்/ புயல்கள் உருவாகுவதுண்டு.
கடந்த 2025, நவம்பர் மாதம் 26ம் திகதி இந்து சமுத்திர வெப்பநிலை ( இலங்கைக்கு தெற்காக) 29.4 பாகை என்ற அளவில் இருந்தமையே ‘டிட்வா’ புயல் உருவாக காரணம்.
ஆனால் இம்முறை எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் இனை விடவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே இது தொடர்பாக நாம் அவதானமாக இருப்பது அவசியம்.
குறிப்பு: இது இன்றைய நிலையில் பல்வேறு மாதிரிகளின் பொதுப்பார்வை அடிப்படையிலான கணிப்பே… இதில் மாற்றங்கள் நிகழக் கூடும் என்பதனைக் கருத்தில் கொள்க.