தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய செனட் சபையில் (நாடாளுமன்ற மேலவை) உரையாற்றிய ஆஸ்திரேலிய செனட்டர் டேவிட் சூபிரிட்ஜ், ஆயுத மோதலின் இறுதிக்கட்ட மாதங்களில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட “கொடூரமான குற்றங்களை” உலகம் இன்றும் நினைவுகூருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
செனட் சபையில் தொடர்ந்து உரையாற்றிய சூபிரிட்ஜ், “பாதுகாப்பு வலயம் என அழைக்கப்பட்ட பகுதிக்குள் சுமார் 300,000 மக்கள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது தொடர்ச்சியான குண்டுவீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இனப்படுகொலையானது 2009 ஆம் ஆண்டில் ஒரேயொரு நாளில் மட்டும் நடந்து முடிந்துவிடவில்லை. அது பல தசாப்தங்களாக நிகழ்ந்துள்ளதுடன், தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து இந்த ஆண்டுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இக்கோரத்தாண்டவத்தின் போது மதிப்பிடப்பட்ட 169,769 தமிழ் மக்கள் எவ்விதத் தகவல்களுமின்றி காணாமல் ஆக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆயுத மோதலின் இறுதிக்கட்ட மாதங்களில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகச் சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்குதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்முறைகளை இழைத்ததுடன், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் திட்டமிட்டு மறுத்திருந்தது.
வட, கிழக்குத் தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களினாலும் மே மாதம் 18 ஆம் திகதி ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்’ (Tamil Genocide Remembrance Day) ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.