விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து எனவும், திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் மூலம் மொத்தம் 897.82 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து. திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மார்ச் 1 வரையில், 2021-22 – 95.86 கோடி, 2022-23 – 166.53 கோடி, 2023-24 – 186.35 கோடி, 2024-25 – 213.94 கோடி, 2025-26 – 235.14 கோடி என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் – 897.82 கோடி.
பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.
மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது. திராவிட மாடல் 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும். இது ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்.” என்று தெரிவித்துள்ளார்.