தவறே செய்யாமல் கஞ்சா கடத்தல் புகாரில் சிக்கி, 12 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளான வினிபெக் (Winnipeg) நகரத்தைச் சேர்ந்த தம்பதி, தற்போது தங்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து மௌனம் கலைத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, ஜான் பாமன் (Jan Baumann) மற்றும் அவரது துணைவி ஷார்லின் ரணதீர (Charlene Ranadheera) ஆகியோர் டொராண்டோ வழியாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். டொராண்டோ விமான நிலையத்தில் அவர்கள் அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தபோது, கனடா எல்லை பாதுகாப்பு முகமை (CBSA) அதிகாரிகள் ஜானை வழிமறித்து கைகளில் விலங்கு பூட்டினர்.
ஜான் மீது கஞ்சா கடத்தல் புகார் சுமத்தப்பட்டது. ஆனால், ஜான் ஒரு சிறிய பேக்-பேக் மட்டுமே வைத்திருந்தார். விசாரணையில் ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. ஜானின் பெயரில் இருந்த லக்கேஜ் டேக் (Tag) மாற்றப்பட்டு, கஞ்சா நிரப்பப்பட்ட வேறு ஒரு பெரிய சூட்கேஸில் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP), ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் ஊழியரான 32 வயது அடாஷா வீட்லி (Atasha Weathley) என்பவரைக் கைது செய்தது. அவர் பயணிகளின் லக்கேஜ் டேக்குகளைத் திருடி, கஞ்சா கடத்த பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து சுமார் 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சுமார் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு இந்தத் தம்பதி விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், தற்போது அவர்கள் செல்லும் இடமெல்லாம் கூடுதல் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜான் பாமன் கூறுகையில்: “விமான நிறுவனத்தை நம்பி நாங்கள் பைகளை ஒப்படைக்கிறோம். ஆனால் அங்குள்ள ஊழியர்களே இப்படிச் செய்வது நம்பிக்கையை உடைக்கிறது. விமான நிலைய ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.”
தவறு செய்யாத தம்பதி தற்போது ‘கருப்புப் பட்டியலில்’ (Flagged) சேர்க்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு முறையும் பயணத்தின்போது பல மணிநேரம் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.