தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகும் ‘டெக்ஸ்லா ‘ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சரமூடு, ஜார்ஜ் மரியன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
இப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், இயக்குநர் பாலா ,தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், ” இப்படத்தின் கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவம் கிடைக்கும். ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழாவில் திரையுலகினர் திரண்டு வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வளவு விரைவில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றுவேன் என எதிர்பார்க்கவில்லை. பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எம்முடைய பாக்கியமாக கருதுகிறேன் ”என்றார்.