பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில, கொழும்பு மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவிடம் வினவுவதற்காக 10 கேள்விகள் அடங்கிய தொகுப்பொன்றை இன்று (22) சமர்ப்பித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்தால், எதிர்கால ஊடகவியலாளர் சந்திப்புகளில் இந்த கேள்விகளை அவரிடம் மீண்டும் மீண்டும் எழுப்புமாறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்னாள் அமைச்சர் இதன்போது முன்வைத்தார். இந்தத் தாக்குதல்களின் மூலம் “உண்மையான பலன்களைப் பெற்றவர்கள்” இருக்கிறார்கள் என்று உரிமை கோரிய அவர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் மற்றும் அவரது பதவிக் கால நீடிப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். அத்துடன், கர்தினால் தனது எதிர்பார்க்கப்பட்ட ஓய்வு வயதைத் தாண்டியும் பலமுறை சேவை நீடிப்புகளைப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அருட்தந்தை சிறில் காமினி இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கைகள், குறிப்பாக 2021 அக்டோபர் 13ஆம் திகதியிட்ட நேர்காணல் ஒன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி “சல்லே” (Sallay) எனக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படும் விடயம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். எத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறானதொரு உரிமைக்கோரல் முன்வைக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், சந்தேகநபர்கள் தங்களது மின்னணு சாதனங்களின் கடவுச்சொற்களை (Passwords) வழங்குமாறு கோரப்பட்ட கோரிக்கைகளின் சட்டபூர்வத்தன்மை குறித்தும் கவலைகளை எழுப்பினார்.

சந்தேகநபரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே நடத்தப்பட்ட விதம் குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நீதித்துறை மருத்துவம் மற்றும் மனித உரிமைகள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, அத்தகைய அறிக்கைகள் துல்லியமானவை எனின், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செயல்களை நியாயப்படுத்துவது பொருத்தமானதா என்றும் கேள்வி எழுப்பினார்.

இவற்றுடன், முன்னதாக இந்த விசாரணையுடன் தொடர்புடைய சில பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டமை குறித்தும் கவலை வெளியிட்ட அவர், முந்தைய குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட நடவடிக்கைக்கான பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளும்போது இத்தகைய முடிவுகள் பொருத்தமானவையா என்றும் கேள்வி எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என கூறப்படும் நபர் அடையாளம் காணப்பட்டதில் முரண்பாடுகள் இருப்பதாக விவரித்த முன்னாள் அமைச்சர் கம்மன்பில, “அபு ஹிந்த்” (Abu Hind) போன்ற நபர்கள் தொடர்பான தகவல்கள் புலனாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்றும் வினவி தனது கருத்துக்களை நிறைவு செய்தார்.