வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அமர்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமரவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியிலாளர் சி.த.காண்டீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் சபையில் நீண்ட விவாதமும் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இடம்பெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் சபை செயலாளரிடம் 6 உறுப்பினர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் பணியாற்றும் ஊடகங்களின் விபரங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றை குறிப்பிட்டு தொடர்ச்சியாக இடம்பெறும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரி சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் கடிதம் அனுப்பியிருந்தது.
இருப்பினும், இதற்கு எழுத்து மூலமான பதில் எதுவும் வழங்கப்படாத நிலையில், முதலாவது சபை அமர்வின் போது ஊடகவியலாளர்கள் 6 பேரும் தொடர்ச்சியாக சபை அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் சபையில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.
இதில் தவிசாளர் தலைமையிலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எவராக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதிபெற்ற பின்னரே சபைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்த காணொளி ஊடக அறியமுடிந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.