மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி – பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. இது குறித்து ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரால் பெறப்பட்ட கைவிரல் அடையாளங்கள் (Fingerprints) புலனாய்வுப் பிரிவினருக்குப் பெரும் உதவியாக அமைந்தன.
சோதனையின் போது சேகரிக்கப்பட்ட கைவிரல் அடையாளங்கள், ஏற்கனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பழைய குற்றவாளி ஒருவரின் அடையாளங்களுடன் ஒத்துப்போயுள்ளன. இதனைத் தொடர்ந்து, பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவனைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தற்போது ஏறாவூர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் தற்போதைய நிலை குறித்துத் தகவல்களைப் பெறப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.