நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (6) காலையிலேயே, முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இரண்டாவது தடவையாகவும் அங்கு கலவரம் இடம்பெற்றிருக்காது. அதனை தடுத்திருக்க முடிந்திருக்கும். சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமல் போனமையே இரண்டாவது தடவையாகவும் அங்கு கலவரம் ஏற்பட காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையிலே ஆரம்பித்திருக்கிறது.
மாலை 4 மணியாகும்போது அங்கு 24 பேர் காயமடைந்து 2 பேர் மரணித்துள்ளர். இந்தளவு பாரிய சம்பவம் இடம்பெற்றிருந்தபோதும் விடயத்துக்கு பொறுப்பான நீதி அமைச்சர் திங்கட்கிழமை மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால், அது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கவேண்டும். ஒருவருட காலம் சென்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவரை இதுவரை நியமிக்கவில்லை. பதில் ஆணையாளரே இருந்து வருகிறார். சிறைச்சாலைகளுக்கு இன்று முறையான தலைமைத்துவம் இல்லை. அதனாலே இந்த சம்பவம் தீவிர நிலைக்கு செல்ல காரணமாகும்.
அதேநேரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் முதல் நாள், இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்று, அதில் பலர் காயமடைந்து, இரண்டு பேர் மரணித்துள்ள நிலையிலும் பெண் கைதிகள் சிறைச்சாலை கூரைக்கு மேல் ஏறி போராட்டம் நடத்திவரும் நிலையில், அன்றைய தினம் இரவு அவர்கள் அனைவரையும் எவ்வாறு அந்த சிறைச்சாலையிலேயே தங்கவைக்க முடியும்?
இவ்வளவு பாரிய சம்பவம் இடம்பெற்றபோதும் உடனடியாக அந்த இடத்துக்கு அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் படையினர் அழைக்கப்பட்டார்களா? சிறைச்சாலைக்குள் மரணம் ஏற்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் கள பரிசோதனை மேற்கொள்ள அந்த பிரதேச நீதிவான் நீதிமன்ற நீதிபதி அங்கு வந்தாரா? இவை எதுவுமே இடம்பெறவில்லை.
அத்துடன் சம்பவ தினம் இரவாகும்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலை பதில் ஆணையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். பலருக்கு காயத்தை ஏற்படுத்தி, இரண்டு மரணங்களை மேற்கொண்ட கைதிகள் சிறைச்சாலைக்குள் இருக்கும் நிலையில், நிமைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக எவ்வாறு தெரிவிக்க முடியும். சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் எத்தனை பேர் காயமடைந்துள்ளர்? எத்தனை பேர் மரணித்திருக்கின்றனர் என நீதி அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்கும்போது, அதுதொடர்பில் சரியான தகவல் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் 2 மணிநேரமாக சமூகவலைத்தளத்தை பார்க்கவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.
சிறைச்சாலையில் இவ்வாறு பாரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கையில், அதுதொடர்பில் உடனுக்குடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்றால், அவ்வாறான ஒரு அமைச்சர் எதற்கு என கேட்கிறோம். பாதுகாப்பு பிரதி அமைச்சர் சம்பவ இடத்துக்கு சென்றாரா? இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சென்றாரா? இல்லை. பொதுவாக சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அங்கு ஆரம்பமாக அதிரடிப்படை வீரர்களே அங்கு அழைக்கப்படுவார்கள். ஆனால் திங்கட்கிழமை காலை சிறைச்சாலைக்குள் ஆரம்பமாக நுழைந்தது, சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளாகும். கலகம் கட்டுப்படுத்தும் அனுபவம், பயிற்சி அவர்களுக்கு இல்லை.
மேலும் சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரை தொடர்புகொள்ள முடியாமல் போயிருக்கிறது. ஏனெனில் இவர்கள் வேறு கலந்துரையாடல் ஒன்றில் இருந்துள்ளனர். நீதி அமைச்சர் இந்த அமைச்சில் மேற்கொள்வதாக தெரிவித்த பல விடயங்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வருவதற்கு ஒருவருட காலம் செல்கிறது. சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இதுவே பிரதான காரணமாகும். அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஆரம்பத்திலே இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண மேற்கொள்வதாக தெரிவித்துள்ள ஒரு வேலைத்திட்டத்தையாவது செய்திருக்கிறதா என கேட்கிறோம்.
எனவே நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை காலையிலேயே, அதிரடிப்படை வீரர்கள் அழைக்கப்பட்டிருந்தால், நீதிபதி தலையிட்டிருந்தால், இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தால், இரண்டாவது தடவையாகவும் கலவரம் இடம்பெற்றிருக்காது. அதனை தடுத்திருக்க முடிந்திருக்கும். சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமல் போனமையாலே இரண்டாவது தடவையாகவும் அங்கு கலவரம் ஏற்பட காரணமாகும். அதனாலே அதிக மரணங்கள் ஏற்பட்டன என்றார்.