காலி – கந்தேவத்தை பகுதியில், போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (20) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அக்மீமன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, குறித்த பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து, 02 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 110 கிராம் புகையிலை மற்றும் 540 கிராம் புகையிலைக் காம்புகள், 4 கையடக்கத் தொலைபேசிகள், 23 தொலைபேசி சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் காலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு வழங்குவதற்காகவே இவற்றைக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.