சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் சார்ந்த பொருட்களை (child sexual abuse and exploitation material) வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நோவா ஸ்கோடியா (Nova Scotia) சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
செயிண்ட்-ஆன்னி-டி-கென்ட் (Sainte-Anne-De-Kent) பகுதியைச் சேர்ந்த 65 வயதான டொமினிக் ட்ரெம்ப்ளே (Dominique Tremblay) என்பவரே, நோவா ஸ்கோடியாவின் ஸ்பிரிங்ஹில் நகரில் உள்ள ‘ஸ்பிரிங்ஹில் நிறுவன’ (Springhill Institution) சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார் என கனடா சிறைச்சாலைத் துறை (Correctional Service Canada – CSC) தெரிவித்துள்ளது. இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆன நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம் குறித்த விபரங்கள் எதனையும் CSC வெளியிடவில்லை என்பதுடன், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“கைதி ஒருவரின் மரணம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் போன்றே, இந்த மரணம் குறித்தும் கனடா சிறைச்சாலைத் துறை மறுஆய்வு செய்யும். அத்துடன், எமது கொள்கைகளின்படி இது குறித்து காவல்துறைக்கும் மரண பரிசோதகருக்கும் (coroner) அறிவிக்கப்பட்டுள்ளது” என அந்த நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ட்ரெம்ப்ளேயின் நெருங்கிய உறவினர்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 அக்டோபர் 6 அன்று, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டை ட்ரெம்ப்ளே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 12 அன்று அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.