சர்வதேச மாணவர்களிடமிருந்து சுமார் 126,000 டாலர்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் குடிவரவு மோசடித் திட்டம் குறித்து விசாரணை நடத்திய பின்னர், கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
‘லேம்ப்டன் கல்லூரி’ (Lambton College) வழங்கிய ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், 2025 பிப்ரவரியில் CBSA இந்த விசாரணையைத் தொடங்கியது.
இரு நபர்கள், கல்விக்கட்டணம் (tuition fees) செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று பொய்யாகக் கூறி சர்வதேச மாணவர்களிடமிருந்து பணம் வாங்கியதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் போலி சேர்க்கை ஆவணங்கள் (fraudulent enrolment documents) வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்ட படிப்புகளில் ஒருபோதும் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் CBSA சோதனைப் பிடியாணைகளை (search warrants) நிறைவேற்றி, மின்னணு ஆதாரங்களைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, கேம்பிரிட்ஜ் (Cambridge) பகுதியைச் சேர்ந்த ஹர்திக் டேவ் (Hardik Dave) மற்றும் லண்டன் (London, Ontario) பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெய்னிஷ்குமார் படேல் (Jainishkumar Patel) ஆகியோர் மீது 5,000 டாலருக்கும் அதிகமான நிதி மோசடி, போலி ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் தவறான தகவல்களை வழங்கத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஹர்திக் டேவ் ஜூலை 10 ஆம் தேதி ஒன்டாரியோவின் லண்டன் நகர நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். ஜெய்னிஷ்குமார் படேல் கனடாவை விட்டு தப்பியோடியுள்ளதாக நம்பப்படுவதுடன், அவருக்கு எதிராகக் கைது பிடியாணை (arrest warrant) பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார்.
இவர் மீதான குற்றச்சாட்டுகளும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாகவே கருதப்படுவர்.