திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி துறவிகளைக் கைது செய்வதற்கு முன்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை வழிமுறைகளை கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் பொலிஸாரும் பின்பற்றுவதில் தவறிழைத்துள்ளனர் என்று வழக்கின் எதிராளிகளில் ஒருவரான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் கிரிஷாந்த நிஸ்ஸங்க எழுத்துமூலமான சமர்ப்பணத்தை சமர்ப்பித்தார்.
இதேவேளை தாமும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாக ஏனைய எதிராளிகள் தரப்பில் மன்றில் ஆஜரான சிரேஸ்ட வழக்கறிஞர் சஞ்ஜீவ வீர விக்ரம வாதங்களை முன்வைத்தார்.
இதனை கருத்தில் கொண்ட திருகோணமலை பிரதம நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களை மன்றில் முன்வைக்க கால அவகாசம் வழங்கி, வழக்கை ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
சாட்சியங்களை முன்வைத்த வழக்கறிஞர் சஞ்சீவ வீர விக்ரம, வழக்குக் கோப்பில் உள்ள ஆவணங்கள் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆவணங்கள் மட்டுமே என்றும், பிக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பௌத்த விவகார ஆணையரிடமிருந்தோ அல்லது புத்தசாசன அமைச்சகத்திடமிருந்தோ எந்த ஆவணங்களும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
புத்த சாசனத்தைக் கையாளும்போது, அதன் பாதுகாப்பு மற்றும் பேணல் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்க அதிகாரிகள் அறிந்துகொள்ளாத நிலையில், இந்த வழக்கைத் தொடர்வது சிக்கலானது என்றும் தமது வாதத்தை மன்றில் முன்வைத்தார்.
இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி, தமது தரப்பு சமர்ப்பணங்களை எழுத்துப்பூர்வ அறிக்கையாக மன்றுக்கு முன்வைக்க வாய்ப்பளித்து, வழக்கை ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாத எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் பொலிஸ் தரப்புக்கு உத்தரவிட்டார்.
எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட வழக்கறிஞர்களான கிரிஷாந்த நிஸ்ஸங்க, சஞ்சீவ வீரவிக்ரம, மனோஜ் அரவிந்த செபஸ்டியன், கலன பின்னடுவ ஹெவா ஆகியோர் ஆஜரானார்கள்.
அதேவேளை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சார்பில் அதன் சட்ட அதிகாரி பாஞ்சாலி பெர்னாண்டோ, கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி அதிகாரி சு.தீபராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.
மேலும், பொலிஸ் தரப்பில் துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம இன்ஸ்பெக்டர் சசங்க குமார சமரசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.
கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது
கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து புதன்கிழமை (08) 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று பகல் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்
இதன்போது அங்கு தோணில் கடத்தி கொண்டுவரப்பட்ட வாவிக்கரையில் வைக்கப்பட்ட கசிப்பை எடுத்துச் செல்ல வந்த இருவரை 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25,26 வயதுடையவர்கள் எனவும் கொக்கட்டிச்சோலை முனைக்காடு மற்றும் மாவிலங்குதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.