டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அது “கிறீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகளின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாட்டை” வழங்குவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.
ஒப்பந்தப்படி, கிரீன்லாந்தில் தேவையானதைச் செய்யும் முழுமையான திறன் அமெரிக்காவிற்கு எப்போதும் இருப்பதை உறுதி செய்ய டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் பிரதிநிதிகளுடன் தாங்கள் பணியாற்றியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்பாட்டின்படி, அமெரிக்காவின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாவிட்டால், கிரீன்லாந்தில் இராணுவ முகாம்களை அமைக்கவோ அல்லது படைகளை நிறுத்தவோ அமெரிக்காவின் எதிரிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
கிரீன்லாந்து முழுவதும் பொருத்தமான பகுதிகளில் கணிசமான அமெரிக்க இராணுவப் பாதுகாப்பை உடனடியாகக் கட்டமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும், அதற்காகப் பல சாத்தியமான இடங்கள் உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அடுத்த வாரம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்திற்கு நூக் (Nuuk) மற்றும் கோபன்ஹேகன் (Copenhagen) ஆகிய இரு நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் “டென்மார்க் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தின் பாதுகாப்பை “வலுப்படுத்துகிறது” என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ப்ரெடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen) கூறியுள்ளார்.