இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பின் கீழ் வாக்களிக்கும் உரிமையுடையவர்களின் எண்ணிக்கையை 39 ஆகக் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் உறுப்பினரான சிதத் வெத்தமுனி குறிப்பிட்டார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடாத விளையாட்டுச் சங்கங்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பிலும் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்களில் விளையாடும் விளையாட்டுச் சங்கங்களுக்கு இரண்டு வாக்குகள் கிடைக்கப்பெறும் என்றும், அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வாக்குரிமை வழங்கப்படும் என்றும் சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.
பல வருடங்களாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடாத சில விளையாட்டுச் சங்கங்களுக்கும் தலா இரண்டு வாக்குகள் வீதம் கிடைக்கப்பெறும் நடைமுறை புதிய அரசியலமைப்பின் மூலம் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.
புதிய அரசியலமைப்பின் முதன்மைத் தத்துவமாக வெளிப்படைத்தன்மைக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சிதத் வெத்தமுனி குறிப்பிட்டார்.
மேலும், தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர் சபையில் 20 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், அதை 14 ஆகக் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், வரைவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டால் இலங்கை கிரிக்கெட் விளையாட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்ய முடியும் என இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
அரசியல் தலைையீடுகள் இன்றி கிரிக்கெட் விளையாட்டை முன்னோக்கிச் செல்லக்கூடிய, மாற்றமடையாத நிலையான நடைமுறை அவசியமானது என்றும் அவர் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அன்றாட நிர்வாகக் கடமைகளை தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இயக்குநர் சபையின் பங்களிப்பை கொள்கை முடிவுகளை எடுப்பதுடன் மட்டும் கட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டார்.
இந்த மாற்றம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய அரசியலமைப்பின் மூலம் இலங்கை கிரிக்கெட்டில் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்குத் தேவையான நடைமுறையை நிறுவ எதிர்பார்ப்பதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.