கியூபெக்கில் குடியேறியதிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வாரம் தங்கள் பட்டமேற்படிப்பு முடிந்த பின் வழங்கப்படும் வேலை அனுமதி (post-graduation work permit) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், உடனடியாக வேலைகளை விட்டு விலக வேண்டியதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அந்த கொலின் சில்வா என்பவர் தெரிவித்துள்ளார்.
கொலின் சில்வா கும்பத்தினர் சிறந்த வாழ்க்கையை நாடி மெக்சிக்கோவை விட்டு வெளியேற முடிவு செய்ததாகவும் கனடா பற்றியும் அதன் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு மனப்பான்மை கொண்ட நாடு என்பதையும் பற்றி அதிகமாக அறிந்ததால் கியூபெக் வந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உடலியல் சிகிச்சை (physiotherapy) துறையில் கல்வி பெற்ற கொலின் சில்வா, லாவல் பல்கலைக்கழகத்தில் எர்கோனாமிக்ஸ் (ergonomics) துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழித் தகுதிகள், முன் நிபந்தனைப் பாடநெறிகள் ஆகியவற்றை நிறைவேற்ற நீண்ட கால முயற்சியில் ஈடுபட்டார்.
“மூன்றாவது மொழியில் முதுகலைப் பட்டம் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் ஆங்கிலமும் ஸ்பானிஷும் பேசுகிறேன்; ஆனால் பிரெஞ்சில் முதுகலைப் படிப்பது பெரிய சவாலாக இருந்தது. ஆனால் நான் அதைச் சாதித்தேன்,” என்று அவர் கூறினார்.
கடந்த மே மாதம் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, பல ஆண்டுகளாக ஏற்பட்ட மன அழுத்தத்திற்குப் பின்னர் இறுதியாக நம்பிக்கை ஏற்பட்டதாக கொலின் சில்வா தெரிவித்தார். தனது துறையில் வேலை கிடைக்காத நிலையில், இரண்டு பள்ளிகளில் குழந்தைகள் பராமரிப்பு சேவைகளில் பணியாற்றத் தொடங்கினார்.
ஜனவரி 26 அன்று, பட்டமேற்படிப்பு முடிந்த பின் வழங்கப்படும் வேலை அனுமதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் அறிந்தார். மாகாணத்தில் இரண்டு வேலைகளை செய்து வந்த அவரது கணவரும் உடனடியாக வேலை நிறுத்த வேண்டும் என்றும், விரைவில் மெக்சிக்கோவுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குடியேற்ற ஆலோசகர் தெரிவித்தாக குறிப்பிட்ட கொலின் சில்வா இந்த அனுமதிக்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் பிரெஞ்சு மொழித் தேர்வின் நான்கு பகுதிகளில் தேர்ச்சி பெற வேண்டும். மூன்று பகுதிகளில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை விட அதிகமாகப் பெற்றிருந்தாலும், எழுத்துத் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் 427 மட்டுமே என அவர் கூறினார். குறைந்தபட்ச தேவையான மதிப்பெண் 428. ஒருபுள்ளி குறைந்ததால் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது என்றார்.
மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு இருந்தாலும் அதற்கான செலவு நூற்றுக்கணக்கான டாலர்கள் ஆகும் என்றும்இ அந்தச் செலவை தங்கள் குடும்பம் தாங்க முடியாத நிலை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னை வரவேற்ற கனடாவைப் பற்றி தவறாக பேச விரும்பவில்லை. ஆனால் இது மிகவும் மனிதாபிமானமற்றதாக எனக்கு தோன்றுகிறது,” என்று அவர் கூறினார். “நாங்கள் குப்பை போல நடத்தப்படுகிறோம்.”
குடியேற்ற வழக்கறிஞர் மேக்சிம் லாப்புவான் கூறுகையில் இந்தப் பிரச்சினை கொலின் சில்வாவுக்கு மாட்டுமன்றி பல மக்கள் எதிர்கொள்கிறார்கள் என தெரிவித்தார்.
2023 முதல், மாகாண மற்றும் மத்திய அரசுகள் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாகாணத்தில் குடியேறுவது மேலும் கடினமாகும் சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
“காலப்போக்கில் புதிதாக வரும் குடியேற்றவர்களுக்கான வாயில்கள் மெதுவாக மூடப்பட்டன. இதனால் தற்போது இங்கே உள்ள சிலர் இனி தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.