யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து அந்நாட்டுக் கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (27) மீன்பிடிக்கச் சென்ற இந்த இரு மீனவர்களது படகும் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது. இதனால் கடலில் திசைமாறிய படகு, இந்திய கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டது.
இதனை அவதானித்த இந்திய மீனவர்கள், தமது விசைப்படகு மூலம் குறித்த படகினை இழுத்துச் சென்று, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கிப் பராமரித்துள்ளனர். பின்னர் அவர்களை இலங்கை கடல் எல்லையில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.
எனினும், கடல் அலையின் வேகம் காரணமாக படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன ஏழாவது நாளான இன்று (வியாழக்கிழமை), தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் குறித்த மீனவர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் தமிழகக் கடலோரக் காவல்படையினரின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவருகிறது.