கனடாவின் டொரொன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Toronto Pearson International Airport) பல மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் மாயமாவதற்கு பல வருடங்களுக்கு முன்னரேயே, இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏர் கனடா (Air Canada) ஊழியர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்தமை தெரியவந்துள்ளது.
கனடிய விமான நிலையங்களுக்குள் நிலவும் ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் (Organized crime) ஊடுருவல் குறித்து CTV News இன் ‘W5’ புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வரும் நான்கு பகுதிகளைக் கொண்ட விசேட புலனாய்வுத் தொடரின் மூன்றாவது பகுதி அறிக்கை மூலமே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்திற்குள் போதைப்பொருள் கடத்தல், வன்முறைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய ஊழியர்கள், நாட்டின் மிக பரபரப்பான பியர்சன் விமான நிலையத்தின் உயர் பாதுகாப்புப் பிரிவுகளுக்குள் (Restricted areas) நுழைவதற்கான அனுமதியை எவ்வாறு தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டனர் என்பது குறித்து உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் நீதிமன்றப் பதிவுகளை மேற்கோள்காட்டி W5 நிறுவனம் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பியர்சன் விமான நிலையத்தின் சரக்கு முனையத்திலிருந்து 22 மில்லியன் டொலருக்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது நபர்களில், ஏர் கனடா நிறுவனத்தின் ஊழியரான பர்ம்பால் சித்துவும் (Parmpal Sidhu) ஒருவராவார்.
பொலிஸ் தரப்புத் தகவல்களின்படி, கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து பியர்சன் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு போதைப்பொருள் கடத்தல் விசாரணைகளில் பர்ம்பால் சித்துவின் பெயர் தொடர்புபட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், W5 நிறுவனத்தினால் கண்டறியப்பட்ட 2012 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ இரகசிய உளவுத்துறை ஆவணமொன்றில், பர்ம்பால் சித்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலொன்றின் தலைவராகச் செயற்பட்டதோடு, பியர்சன் விமான நிலையத்தினூடாக பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்துவதற்காகப் ‘அரசாங்க நிறுவனங்களுக்குள் ஊடுருவி’ குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த உளவுத்துறை அறிக்கை ஏர் கனடா நிறுவனத்திற்குப் பகிர்ந்துகொள்ளப்பட்டதா என்பது உறுதி செய்யப்படாத போதிலும், இந்தத் தங்கக் கொள்ளை நிகழும் வரை சித்து தனது உத்தியோகபூர்வ பதவியையும், விமான நிலைய பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தையும் (Security clearance) எவ்வித தடையுமின்றித் தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்த அனுமதி
பர்ம்பால் சித்துவின் விவகாரத்தைப் போன்றே, கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் விசாரணைகளுக்கு முகங்கொடுத்த பல ஊழியர்கள் பியர்சன் விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதற்கான அனுமதியைத் தொடர்ந்தும் பெற்றிருந்த பல சம்பவங்களை W5 வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
லெவி டேவிஸ் (Levi Davis): ஏர் கனடாவின் பயணப்பொதி கையாளுநரான (Baggage handler) இவர் மீது, 2010 ஆம் ஆண்டிலிருந்தே பியர்சன் விமான நிலையத்தில் பயணப்பொதிகளின் அடையாள அட்டைகளை மாற்றி (Bag-tag switching) கொக்கெய்ன் கடத்தியதாகக் கடுமையான சந்தேகங்கள் எழுந்திருந்தன. எனினும், அவர் மீது அப்போது வழக்குத் தொடரப்படவில்லை. பின்னர் 2025 இல், இவரது பெயரின் கீழ் பயணித்த ஒரு வயதான கனடியப் பிரஜையின் பயணப்பொதியில் போதைப்பொருள் இருந்தமையால் அவர் பெர்முடாவில் தடுத்து வைக்கப்பட்டார். விசாரணையில் அந்தப் பயணி நிரபராதி எனத் தெரிந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து லெவி டேவிஸ் கைது செய்யப்பட்டார். இருப்பினும், பின்னர் விவரிக்கப்படாத காரணங்களால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. அவர் தனது வேலையையும் பாதுகாப்புப்pass-ஐயும் இறுதிவரை தக்கவைத்திருந்தார்.
மணி தலிவால் (Mani Dhaliwal): கனடியப் பிரஜையான இவர், பியர்சன் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவில் (Security office) கடமையாற்றியதோடு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளில் கனேடிய அரச பொலிஸாருடன் (RCMP) இணைந்து செயற்படும் ஒரு பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்தார். இவர் 2025 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய கொக்கெய்ன் கடத்தல் முறியடிப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு முன்னரேயே, இவர் போதைப்பொருள் கடன்பிரச்சினைக்காகக் கடத்தப்பட்டமை, இவரது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை மற்றும் இவரது சகோதரி போதைப்பொருள் மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதானமை போன்ற பல ‘சிவப்பு எச்சரிக்கைகள்’ (Red flags) இருந்தபோதிலும், இவருக்கு விமான நிலையத்தின் மிக முக்கியமான பாதுகாப்புப் பதவி வழங்கப்பட்டிருந்தது.
டெவோன் லாயிட் மெக்லீன் (Devon Lloyd McLean): விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஊழியரான இவர், பியர்சன் விமான நிலையத்தினூடாக கொக்கெய்ன் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ‘Project O’Abyss’ என்ற பாரிய பொலிஸ் கூட்டு நடவடிக்கையின் போது சிக்கி, 2018 இல் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்தத் தண்டனைக்கு முன்னரேயே, அவர் இருமுறை போதைப்பொருள் வழக்குகளில் சிக்கியிருந்தார், அத்துடன் விமான நிலையப் பாதுகாப்ப சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றபோது அவரிடமிருந்து வெடிமருந்துப் பெட்டி (Ammunition magazine) கைப்பற்றப்பட்டது. இத்தனைக்கும் மத்தியிலும் அவர் தனது பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உள்நாட்டு அச்சுறுத்தலும் உத்தியோகபூர்வத் தரவுகளும்
விமான நிலைய ஊழியர்களைப் புலனாய்வு செய்து, அவர்களின் பாதுகாப்பு அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு போக்குவரத்து அமைச்சுக்குப் பரிந்துரைக்கும் ‘SIBS’ (Security Intelligence Background Section) பிரிவின் ஓய்வுபெற்ற அரச பொலிஸ் (RCMP) அதிகாரியான உலிசஸ் பொட்டெல்ஹோ (Ulisses Botelho) இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:
“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்குத் துணையாகச் செயற்படும் ஊழல் நிறைந்த ஊழியர்களைக் கண்டறிவதே எங்களது பணியாகும். புலனாய்வாளர்களால் ஆபத்தானவர்கள் என அடையாளம் காட்டப்பட்ட பல ஊழியர்கள், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 2007, 2008 ஆம் ஆண்டுகளில் நான் குற்றக் கும்பல்களைப் புலனாய்வு செய்த போது இலக்கு வைக்கப்பட்ட நபர்கள் சிலர், இப்போதும் பியர்சன் விமான நிலையத்தின் மிக முக்கியமான உயர் பாதுகாப்புப் பிரிவுகளில் பணியாற்றுவதை நான் கண்டு அதிர்ச்சியடைந்தேன். விமான நிலையங்களுக்குள் இருக்கும் இவ்வாறான ‘உள்நாட்டு ஊழல்வாதிகள்’ (Insider corruption) இல்லாமல், ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்களைச் செய்யவே முடியாது” என்றார்.
கனடா போக்குவரத்து அமைச்சிடமிருந்து (Transport Canada) W5 சேகரித்த பிரத்தியேக தரவுகளின்படி, கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் கனடாவின் நான்கு பெரிய விமான நிலையங்களில் 125,000 க்கும் அதிகமான பாதுகாப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 7,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கொண்டுள்ளதாக (Security concern) அடையாளப்படுத்தப்பட்ட போதிலும், அவர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதற்கான உத்தியோகபூர்வ பாதுகாப்புப் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்துக் கனடா போக்குவரத்து அமைச்சிடம் வினவிய போது, பாதுகாப்புப் பங்காளிகளிடமிருந்து கிடைக்கும் அனைத்து எதிர்மறைத் தகவல்களும் (Adverse information) அனுமதியை ரத்துச் செய்வதற்குப் போதுமானதாக அமைவதில்லை என்றும், 20 வருடங்களுக்கு முந்தைய போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறிய குற்றங்களும் இந்த அச்சுறுத்தல் பட்டியலில் உள்வாங்கப்படுவதால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் காட்டப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. எனினும், அடையாளப்படுத்தப்பட்டவர்களில் எத்தனை பேர் மிக ஆபத்தான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற விபரத்தை வெளியிட அமைச்சு மறுத்துவிட்டது.