கண்டியில் இன்று வியாழக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய மாணவனும் வியாழக்கிழமை (02) மாலை உயிரிழந்துள்ளதாக பல்லேகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியின் பிரதான பாடசாலைகளான புனித சில்வெஸ்டர் மற்றும் வித்தியார்த்த கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே, தனியார் பேருந்துடன் மோதி இவ்விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் உயிரிழந்திருந்தார்.
புனித சில்வெஸ்டர் கல்லூரியின் 13 ஆம் ஆண்டில் கணித பிரிவில் கல்வி பயின்ற நெதுல நிம்தினு மற்றும் சஜீவ கருணாரத்ன ஆகிய இரு மாணவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த மாணவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.