2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நடப்புக் கணக்கைப் பொறுத்தமட்டில், 2025 ஜனவரியில் 100 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், 2026 ஜனவரியில் சுமார் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான முதுகலை பட்டப்படிப்பு பீடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண முடிகிறது. குறிப்பாக, 2025 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2026 ஜனவரியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 8.8 சதவீத வளர்ச்சியையும், கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி 5.9 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது.
நாட்டின் நடப்புக் கணக்கைப் பொறுத்தமட்டில், 2025 ஜனவரியில் 100 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், 2026 ஜனவரியில் சுமார் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்த சாதகமான மாற்றத்திற்கு வாகன இறக்குமதி செலவுகள் குறைந்தமை ஒரு முக்கிய காரணமாகும்.
2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு குறையும். இதனால் இறக்குமதி செலவுகள் குறைந்து வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியும். உலகப் பொருளாதாரத்தில் இலங்கை படிப்படியாக வலுவடைந்து வருவதை இது காட்டுகிறது.
சேவைத் துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட, உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்படும் வருமானமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும். உலகளாவிய ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் குறைய வாய்ப்புள்ள போதிலும், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வாகன இறக்குமதி செலவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் அந்த இடைவெளியை நிரப்ப முடியும்.
இந்த நிலை தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கையின் செலுத்தல் மீதியில் சாதகமான வருமானத்தை பேண முடியும் என்பதுடன், இது உலகப் பொருளாதார அரங்கில் இலங்கையை ஒரு சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என நம்புகின்றோம் என்றார்.