ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையிலான ஒரு ‘புரிந்துணர்வு திட்டம்’ முதலில் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஈரான், அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய போருக்குப் பின்னர் கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள், எவ்வித உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவடைந்தன. இதனையடுத்து இந்த வார இறுதியில் மீண்டும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார்.
எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருக்கும் இஸ்லாமாபாத்தில் அவற்றை ஒருங்கிணைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அத்தகைய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று சில தூதரக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து தெற்கு துருக்கியின் அன்டலியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு தூதரகக் கருத்தரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கதிப்சாதே, “இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு திட்டத்தை இறுதி செய்வதில்தான் நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். தோல்வியடைவது உறுதி என்று தெரிந்த, மேலும் மற்றொரு கட்ட மோதல் தீவிரமடைவதற்கு ஒரு சாக்காக அமையக்கூடிய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை.
புரிந்துணர்வு திட்டத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளும் வரை, பேச்சுவார்த்தைக்கான தேதியை எங்களால் நிர்ணயிக்க முடியாது. உண்மையில், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டிருந்தது. ஆனால், ஈரானை சர்வதேச சட்டங்களிலிருந்து விலக்கு பெற்ற நாடாகச் சித்தரிக்க முயன்ற அமெரிக்காவின் அதிகபட்ச கோரிக்கைகள் தான் ஒரு உடன்பாட்டை எட்டுவதைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்.
மேலும், “சர்வதேச சட்டங்களிலிருந்து விலக்கு பெற்ற நாடாக இருப்பதை ஈரான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நாங்கள் எதற்கெல்லாம் கட்டுப்படுகிறோமோ, அவை அனைத்தும் சர்வதேச விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும்” என்றார்.