வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தோல் நோயியல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், இந்த சர்வதேச மாநாட்டின் தலைவருமான தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் நயனா மதரசிங்க, இந்த மாநாடு முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் தோல் நோயியல் துறையைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இம்மாநாட்டின் போது 45 வெளிநாட்டு வளவாளர்கள் தோல் நோயியல் துறையின் புதிய போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதேவேளை, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150 தோல் நோய் நிபுணர்களும் வளவாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.