புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ், இந்நாட்டின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கும் நோக்கில், முதன்முறையாக தேசிய நாமல் உயனவை ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனப்படுத்தும் நிகழ்வும், அதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அநுராதபுர மாவட்டத்தின் பலாகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 602 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட தேசிய நாமல் உயன, தேசிய, சமய, சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாகப் பல பெறுமதிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாகும். இதன் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க, புத்தசாசன அமைச்சின் தலையீட்டுடன் இது தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடையாளப்படுத்தும் பெயர்ப் பலகையை ஜனாதிபதி இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாகத் திறந்து வைத்தார்.
இந்த தனித்துவமான சுற்றாடல் மரபுரிமையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய தேசியப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
ஆரம்பம் முதல் இன்று வரை நாமல் உயனவைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்ய வனவாசி ராகுல தேரர் ஆற்றிய அர்ப்பணிப்பை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் பாராட்டினார்.
நாமல் உயனவின் 35 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை, ‘தேசிய நாமல் உயன கல்விச் சஞ்சிகை’ ஆகியவற்றை வனவாசி ராகுல தேரர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கம் செய்த மிகச்சிறந்த சுற்றுச்சூழல் சேவையாக வரலாற்றில் இடம்பெறும்” என இங்கு விசேட அனுசாசனை உரை நிகழ்த்திய நாமல் உயனவின் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரர் குறிப்பிட்டார்.
இந்தத் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) தேசிய நாமல் உயனவில் நடைபெறவிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதனை ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை மிகவும் பாராட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உள்ள தேவையை இந்நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரையும் ஒன்றிணைத்து தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்குத் தீர்வுகளைக் காண வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய நாமல் உயனவின் நிறுவனர் வண, வனவாசி ராகுல தேரர்,
1991 மார்ச் 28 ஆம் திகதி நான் இந்த வனப்பகுதிக்கு வந்து மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து இதனை உருவாக்கினேன். அப்போது பிரதேச தேரர்களினதும் மற்றும் மக்களினதும் பல்வேறு விமர்சனங்களையும் அவதூறுகளையும் எதிர்கொண்டேன், எனக்கு எதிராக பத்திரிகைகளில் எழுதினார்கள். ஆனால் நான் தளரவில்லை.
ஆனால் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், பெர்டி பிரேமலால் திசாநாயக்க எனக்கு உதவினார். இன்று மின்சாரம் கிடைத்திருப்பதற்கு அவரே காரணம். அதேபோன்று, சந்திரிகாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் எனக்கு உதவினார்கள். நான் அவர்களிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் நான் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கான கதவுகள் எனக்குத் திறந்தே இருக்கின்றன. ஏனென்றால் நான் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.
இன்று, உங்கள் பதவிக் காலத்தில், தேசிய நாமல் உயன அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதிகள் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். மேலும், தேசிய நாமல் உயனவை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கமகெதர
திசாநாயக்க ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ரோஷன் கமகே உள்ளிட்ட அதிகாரிகளும் இப்பணியை நன்கு முகாமைத்துவம் செய்தனர்.இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் இப்பணிக்கு விளம்பரத்தை வழங்கின. அதனையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.
தேசிய நாமல் உயன எனது தனிப்பட்ட சொத்தல்ல, நான் இதன் காவலாளி மட்டுமே. எனக்குப் பிறகு இதனை மத்திய கலாசார நிதியத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தேன். அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த இடத்தை கங்காராம விகாரையுடன் இணைத்து, ஜனாதிபதியின் செயலாளர், வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், புத்தசாசன அமைச்சின் செயலாளர் போன்ற பதவிநிலைகளில் இந்தச் செயல்பாடுகளைத் தொடரவும் நான் எண்ணியிருந்தேன். இல்லையெனில், நான் இல்லாத காலத்தில் இது அழிந்துவிடக்கூடும்.
நான் இந்த நாட்டுக்காக ஏதோ ஒன்றைச் செய்திருக்கிறேன். நான் இந்த நாட்டிற்கோ அல்லது இந்த இனத்திற்கோ கடன் பட்டவன் அல்ல. என்னிடமிருந்து நிறைவேற்றப்பட வேண்டிய மிக உயரிய கடமை இதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். அநுராதபுரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள கிராமத்தில் பிறந்தவன் என்ற ரீதியில், இன்று உங்கள் கைகளால் இது தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்படுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அதேபோல், பலாகல பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பாடசாலைகளும் இரண்டு வைத்தியசாலைகளும் உள்ளன. அந்த மக்களுக்காக, அவற்றில் ஒரு பாடசாலையையும் ஒரு வைத்தியசாலையையும் சகல வசதிகளுடன் கூடிய முழுமையான பாடசாலையாகவும் வைத்தியசாலையாகவும் அபிவிருத்தி செய்து தருமாறு உங்களிடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ. செனரத் விக்ரமசிங்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் குரே, தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.