இலங்கையின் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட மாற்றங்களை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளதாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழுவில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் கூடிய உபகுழுவின் போதே, புதிய கல்வி மறுசீரமைப்பின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
முக்கிய விடயங்கள்:
முதலாம் தர மறுசீரமைப்பு: 2026ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.
பாடப்புத்தகங்கள் வழங்கல்: முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான செயற்பாட்டு நூல்கள் (Modules) அச்சிடத் தயாராக உள்ளன. இதில் இரண்டாம் தவணைக்கான நூல்கள் ஏப்ரல் பாடசாலை விடுமுறையின் பின்னர் மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சிகள்: புதிய கல்வி முறைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 6ஆம் தரத்திற்குரிய பாட அலகுகள் விசேட குழுக்களினால் ஆழமாக மீளாய்வு செய்யப்படுகின்றன.
நிபுணர் குழு வருகை: மாணவர் மதிப்பீடுகள் மற்றும் பெறுபேறு கணிப்பீடுகள் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.