இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய கிழக்கு மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவும் நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள மோதல்களினால் வர்த்தகம், பணப்பரிமாற்றம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் சார்ந்து இலங்கை கணிசமானளவு பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு, இயக்குநர் சபையின் ஒப்புதலுக்காக 2025 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2025 நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் நாடு மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்ததை அடுத்து, துரித நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குமாறு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் வேண்டுகோள் விடுத்தது.
அதனையடுத்து இதுபற்றி அறிவிப்பொன்றை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பணிப்பாளர் எவான் பபஜோர்ஜியோ, துரித நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அவசர நிதியுதவிக் கோரிக்கைக்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வைப் பூர்த்திசெய்வது பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்கு 2026 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தமது அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகைதரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அண்மையில் இதுபற்றிக் கருத்துரைத்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை ஒன்றிணைந்து மேற்கொள்வதற்கு நாணய நிதியத்தின் இயக்குநர் சபையிடம் அனுமதிகோர உத்தேசித்திருப்பதாகவும், அதற்கமைய இம்மீளாய்வு பெரும்பாலும் எதிர்வரும் மே மாதமளவில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (19) வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த அடுத்தகட்ட மீளாய்வுகள் என்பன பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, நாணய நிதிய அதிகாரிகளின் வருகை குறித்த அறிவிப்பை ஜுலி கொஸாக் வெளியிட்டார். இலங்கை தொடர்பில் அங்கு அவர் மேலும் கூறியதாவது:
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட மிகமோசமான தாக்கத்துக்கு மத்தியிலும் இலங்கையின் மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாக அவர் அங்கு சுட்டிக்காட்டியிருந்தார். அதுமாத்திரமன்றி இத்தகைய மிகமோசமான சவாலை இலங்கையர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆச்சரியத்தையும், அவர்களது மீண்டெழும் தன்மையினால் ஈர்க்கப்பட்டமை குறித்தும் நிறைவேற்றுப் பணிப்பாளர் பகிர்ந்திருந்தார்.
அதேபோன்று இலங்கையின் பொருளாதாரமானது ஒப்பீட்டளவில் வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து வருகிறது. அது 2025 ஆம் ஆண்டு 5 சதவீதத்தினால் வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் 1.6 சதவீதமாகப் பதிவாகியிருக்கிறது. கடன் மறுசீரமைப்பு செயன்முறை முடிவுறும் தருவாயில் இருப்பதுடன், மொத்த வெளிநாட்டுக் கையிருப்பு குறிப்பிடத்தக்க அளவினால் உயர்வடைந்துள்ளது. இருப்பினும் தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள மோதல்களினால் வர்த்தகம், பணப்பரிமாற்றம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் சார்ந்து இலங்கை கணிசமான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருக்கிறது. இது இலங்கையின் அடுத்தகட்ட பொருளாதார நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்நிலையில் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வைப் பூர்த்திசெய்வதே பிரதான இலக்காகக் காணப்படுகிறது.
அதேவேளை இதுபற்றிய கலந்துரையாடல்களின் ஓரங்கமாக மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எவ்வாறான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பது பற்றியும் அதிகாரிகள் விரிவாக ஆராய்வர். அதன்படி அவ்வதிகாரிகள் குழுவினர் திரும்பிச்செல்லும்போது இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் இலங்கைக்குத் தொடர்ந்து எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் அடங்கிய மதிப்பீட்டைத் தம்வசம் வைத்திருப்பர் எனக் குறிப்பிட்டுள்ளார்.