கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தியும் மாவட்ட அரசாங்கதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மனுவில் தெரிவிக்கப்படுவதாவது,
கடந்த 25. 2. 2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா எமது சம்மேளனத்தின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அன்றைய கூட்டத்திற்கு எம்மை அழைக்காமையால் நாம் அங்கு சமூகமாகவில்லை. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு விடயத்தை அதிகாரிகள் கையில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மிக மோசமான வார்த்தைகளால் எமது சம்மேளனம் விமர்சிக்கப்பட்டுள்ளது.
என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு எமது பக்க நியாயங்களையும், உண்மைகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு தருகிறோம். ஆராய்ந்து ஏற்ற ஆவண செய்வீர்கள் என நம்புகிறோம். இதன்போது, “இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம்”பதிவு அற்றதாக தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு எமது சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு உபசட்டவிதிகள் அங்கிகரிக்கப்பட்டு, வங்கி நடைமுறைகள், ஒப்பந்த வேலைகள் செய்யப்பட்டு முழுமையான செயற்பாட்டு அமைப்பாக இன்றுவரை இயங்கி வருகின்றது.
கடந்த 2022ஆம் ஆண்டு தற்போதைய பிரதி கமநல அபிவிருத்தி ஆணையாளர் “சமமேளனம்” என பெயரிட்டு இருப்பது சட்ட ஏற்பாட்டுக்கு ஏற்புடையதாக இல்லாது இருப்பதால் பொதுக்கூட்டம் கூடி பெயர்மாற்றம் செய்து தருமாறு கோரி இருந்தார். இதன் பிரகாரம் பெயர் மாற்றம் மேற்கொண்டுள்ளோம்.
அதே சமயம், எமது கணக்குகள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட கணக்காய்வு நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு பிரதிகள், மாவட்ட பிரதி ஆணையாளர் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் வழங்கி பொதுமக்கள் பார்வைக்கும் எமது காரியாலயத்தில் ஒட்டி பொதுச்சபை கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கிகரிக்கப்பட்ட அறிக்கை.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் சபையில் கூறிய 2019ஆம் ஆண்டில் இரணைமடு சம்மேளனத்தால் சேகரிக்கப்பட்ட 25, 451,949 ரூபா நிதி விபரம் கோப்பாய் குழுவில் இருந்து பெற்றதாக தெரிவித்திருந்தார். இது எமது கணக்கறிக்கையில் 01.01.2019 ஆம் திகதியில் மொத்தப் பொறுப்பு ஆகும்.
இதில் நடைமுறை அல்லாத சொத்துக்களின் பெறுமதி (கட்டடங்கள்) 25, 300,002ரூபாய் என்பதை அர்ச்சுனாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே ஒவ்வொரு ஆண்டின் மொத்த பொறுப்பிலும் இந்த நடைமுறை அல்லாத அசையாத சொத்துக்களின் பெறுமதி வரும்.
இந்நிலையில், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேச வயல் நிலங்களிற்கு உரமானியம் வழங்கியது என தெரிவித்துள்ளார்.
இதற்கும் எமது சம்மேளனத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. ஆயினும் 2021.3.25 இரணைமடு பயிர்செய்கை குழு கூட்ட தீர்மானப்படி இராணுவத்தினர் வைத்துள்ள அரச பண்ணை காணி 65 ஏக்கருக்கு நீர் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி உரம் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே மேற்படி அவரின் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதுடன் அனைத்திற்கும் ஆவணரீதியான சான்றுகளை சமர்ப்பித்து எமது தரப்பு உண்மையை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம். இதனால் எமக்கான வாய்ப்பை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.
தலைவர் தங்களின் மேலான கவனத்திற்கு. கோப்பா குழு இலங்கை நாடாளுமன்றம், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யெ.றஜீவன், இ.அர்ச்சுனா, அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட செயலகம் கிளிநொச்சி, பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி, பிரதிப்பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்களம் கிளிநொச்சி, பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர், விரிவாக்கம் கிளிநொச்சி, பணிப்பாளர், தேசிய கணக்காய்வு திணைக்களம், மாவட்ட செயலகம் உள்ளிட்டவர்களுக்கு இந்த மனுவின் பிரதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.