ஈரான் மீதான அமெரிக்காவின் காலக்கெடு இன்று இரவுடன் முடிவடையும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியும், அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்படாது” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா ஏற்கனவே மிரட்டியுள்ளது. அதற்கான இறுதி காலக்கெடு இன்று இரவு 8:00 மணி (அமெரிக்க நேரம்) உடன் முடிகிறது.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அங்குள்ள ‘புத்திசாலித்தனமான’ தலைவர்களுடன் ஒரு புரட்சிகரமான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “உலகின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் இன்று இரவு மிக முக்கியமான தருணம். 47 ஆண்டுகால ஊழல், மிரட்டல் மற்றும் மரணம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது. ஈரானின் சிறந்த மக்களுக்கு கடவுள் ஆசி வழங்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் உயர்வைக் கண்டுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு (Kharg Island) மீது ஏற்கனவே அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.