இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளார். இது தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல்கள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றன.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி (Chief of Staff) பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே (Dr. Satyanjal Pandey) ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரின் வருகைக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்து இதில் விரிவாக ஆராயப்பட்டது.
தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து உத்தியோகபூர்வப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் மீளாய்வு செய்யப்பட்டது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு, இந்திய உயர்மட்டத் தலைவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு விஜயம் செய்து வருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடைந்து வருவதைக் காட்டுகிறது.