மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பல கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு
நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது.
இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு சிறைச்சாலையினுள் நிலவிய சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன.
இதன்போது கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பாதுகாப்புத்தரப்பினர் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்திய நிலையில், மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.