டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான இழிவுபடுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு கேமரா (CCTV) தொகுதி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று ஊழியர்களும் ஏற்கனவே இருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நோர்வூட் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் பொறுப்பிலுள்ள CCTV தரவுகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைக் குழுவினர் பரிசோதித்த காட்சிகளைத் தவிர மேலதிக ஆதாரங்கள் ஏதும் பதிவாகியுள்ளதா என்பதைக் கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் 2026.05.18 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அவமதிப்புச் சம்பவம் கடந்த மாதம் (23) ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இம்மாதம் (03) ஆம் திகதி பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து, முறையான விசாரணையைக் கோரிய பின்னரே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
போராட்டத்தின் விளைவாக, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நிபுணத்துவ வைத்தியர்கள் உள்ளிட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று ஊழியர்களும் தற்காலிகமாக வைத்தியசாலையிலிருந்து நீக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.