இலங்கைக்கு இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை 480 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கவும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவாக விடுவிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒப்புக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா (Masato Kanda) தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பபட்டன.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அண்மைய பேரிடர் சூழ்நிலையைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.
பேரிடருக்குப் பிந்தைய நிலைமைகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா பாராட்டினார். ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சூறாவளி அனர்த்தத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடனான வங்கியின் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார். நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டும் அதேவேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
மத்திய மலைநாட்டில் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.