இலங்கையின் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான சிவிலியன்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் இன்னும் இராணுவத்தின் வசம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்றைய தினம் (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதை விரைவுபடுத்தி, மீள்குடியேற்றத்திற்கு வழிவகுப்பதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் எழுப்பப்பட்ட கவலைகளையடுத்து, மட்டக்களப்பில் இரண்டு இராணுவ முகாம்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டதை அவர் வரவேற்றார். எனினும், காணிகள் விடுவிக்கப்படும் வேகம் இன்னும் மிகவும் மந்தமாகவே உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பானது நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றிற்குப் முட்டுக்கட்டையாக அமைகிறது எனக் குறிப்பிட்ட அவர், உண்மையான தேசிய பாதுகாப்புத் தேவைகள் உள்ள இடங்களைத் தவிர, ஏனைய பகுதிகளில் இராணுவப் பரவலாக்கல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு நிகரான அளவிற்குப் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தங்களது சொந்தக் காணிகளை மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பலாலி, மயிலிட்டி மற்றும் கேப்பாப்பிலவு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் அமைதியான போராட்டங்களை சாணக்கியன் இங்கு சுட்டிக்காட்டினார். அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சிவிலியன் காணிகளை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்தி (NPP) பலாலி பகுதியில் ஒரு வட்டாரத்தைக் கைப்பற்றியது என்பதைக் குறிப்பிட்ட அவர், “அந்த வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு அதனை நிறைவேற்றிக் காட்ட வேண்டிய கடமை இப்போது உள்ளது” என்றார்.
இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் குறித்த விபரங்களை மாவட்ட வாரியாகவும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு மற்றும் எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கான காலக்கெடு ஆகிய விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
சாணக்கியன் மேலும் சில குறிப்பிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளை பின்வருமாறு பட்டியலிட்டார்:
-
மயிலிட்டி: சுமார் 700 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள்.
-
பலாலி: சுமார் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள்.
-
கரைச்சி பொது நூலகம்: நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான காணி.
-
இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிறுவனம்: இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி.
-
கேப்பாப்பிலவு: 59.5 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிக காணித் துண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
கேப்பாப்பிலவு மக்களுக்கு மாற்று நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த சாணக்கியன், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு மட்டுமே தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைப்பதை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், “பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே மிக நீண்ட காலம் காத்திருந்துவிட்டார்கள்” எனத் தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.