கடந்த வாரம் ‘ஃபேர்வியூ மால்’ (Fairview Mall) வணிக வளாகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டுக் காயப்படுத்திய நபர், குறைந்தது ஆறு வெவ்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஸ்மித், தலைமறைவாக உள்ள கைல் டக்ளஸ் ப்ரூஸ் (Kyle Douglas Prouse) குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட்டார்.
சம்பவத்தின் பின்னணி: ஏப்ரல் 21 ஆம் திகதி காலை, நார்த் யார்க்கில் உள்ள ஃபேர்வியூ மால் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அங்கிருந்த நகைக்கடை ஒன்றைக் கொள்ளையடிக்கும் நோக்கில் சந்தேக நபர் உள்ளே நுழைந்துள்ளார். அவரைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பிறகு அங்கிருந்து ஒரு வெள்ளை நிற வானில் (Van) தப்பிச் சென்ற அவர், பின்னர் கருப்பு நிற ஹோண்டா அக்கார்ட் (Honda Accord) காரைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
தொடர் குற்றங்கள்: 53 வயதான இந்தச் சந்தேக நபர் மாண்ட்ரியலைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு டொராண்டோ மற்றும் வான்கூவருடன் தொடர்புகள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலிருந்து ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் உள்ள வங்கிகள் மற்றும் நகைக்கடைகளில் குறைந்தது ஆறு கொள்ளைச் சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளதை விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காவல்துறையின் எச்சரிக்கை: “இந்த நபர் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார். அவருக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தாலோ அல்லது அவர் தப்பிப்பதற்கு உதவி செய்தாலோ, அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று இன்ஸ்பெக்டர் ஸ்மித் எச்சரித்துள்ளார். மேலும், ப்ரூஸை நேரடியாகத் தொடர்பு கொண்ட அவர், உடனடியாகச் சரணடையுமாறு அறிவுறுத்தினார்.
வெகுமதி அறிவிப்பு: சந்தேக நபரின் கைதுக்கு உதவும் வகையில் தகவல் வழங்குபவர்களுக்கு $25,000 வரை வெகுமதி வழங்கப்படும் என ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அறிவித்துள்ளது. இந்த வெகுமதி சலுகை 2026 ஜூன் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
“இது ஒரு வணிக நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மற்றவர்களைப் பாதுகாக்க தினமும் பணிக்கு வரும் தனிநபர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பின் மீதான தாக்குதல்,” என்று க்ரைம் ஸ்டாப்பர்ஸ் தலைவர் சீன் ஸ்போர்டூன் தெரிவித்தார்.
சந்தேக நபரை எவராவது கண்டால், அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும், உடனடியாக 911 என்ற எண்ணிற்கு அழைத்துத் தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.