ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதரகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது செய்தியைப் பதிவு செய்தார்.
அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
“ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவர்களின் மறைவு குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக்காலத்தில் இலங்கை மற்றும் ஈரான் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமான முறையில் விரிவடைந்தன. ஈரான் வழங்கி வரும் நட்புறவை இலங்கை இப்போதும் உயர்வாக மதிக்கிறது. இந்த துயரமான வேளையில் எமது எண்ணங்கள் ஈரான் நாட்டு மக்களுடன் நிலைத்திருக்கும்.”
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த அமைச்சர், ஈரான் மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்கெடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.