கொழும்பு: அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் பாரியளவில் அதிகரித்துள்ள இறக்குமதிச் செலவுகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்குடன், கொரோனா பெருந்தொற்று காலத்தைப் போன்று பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மீண்டும் ‘வீட்டிலிருந்தே பணியாற்றும்’ (Work From Home) முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உத்தியோகபூர்வ தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் நேற்று (24) இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இதற்கான உத்தியோகபூர்வ திட்டம் இன்றோ அல்லது நாளையோ (மே 25 அல்லது 26) அரசாங்கத்தினால் அறிவிக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், உள்நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை, குறிப்பாக டீசல் நுகர்வை (Diesel usage) அவசரமாகக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மைக்காலமாக டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி 332.23 ரூபாயாகக் காணப்பட்ட அமெரிக்க டொலரின் மதிப்பு, அண்மைய வர்த்தக நாள் முடிவில் வணிக வங்கிகளில் கொள்வனவு வீதம் 342.63 ரூபாயாகவும், விற்பனை வீதம் 354.03 ரூபாயாகவும் கணிசமாக உயர்ந்திருந்தது. எனினும், பின்னர் ரூபாயின் மதிப்பு ஓரளவு ஸ்திரமடைந்துள்ளது.
மாற்று வீதங்களின் வீழ்ச்சி தொடருமானால், சந்தையில் மத்திய வங்கி தகுந்த தலையீடுகளை மேற்கொள்ளும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணப் பொருளாதார நிலைக்கு மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலே முக்கிய காரணம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை விடவும் இறக்குமதிச் செலவுகள் (Import bill) மிக உச்சக்கட்டமாக அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக (CPC) 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளது.
இவை தவிர, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதித் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், வாகன இறக்குமதிக்காக மட்டும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்காக மட்டும் சுமார் 522 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தங்களது நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளதாக (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
“நாங்கள் தற்போது அக் கடனுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த முயற்சி செய்து வருகிறோம். வழக்கமாக 100 முதல் 110 மில்லியன் டொலர்களாகக் காணப்படும் எங்களது மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு, தற்போது 500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எனினும், தற்போதைக்கு நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராகவே உள்ளது. உலக சந்தையில் நிலவும் அதிகப்படியான விலை உயர்வே எங்களுக்கு தற்போதைய பெரும் சவாலாக உள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.