தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளை தொடர்ந்து, ஏற்கனவே துப்பாக்கிதாரிகள் இருவர் உட்பட 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேநேரம், நேற்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றவாளிகளுக்கு உதவிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், இப்பாகமுவ மற்றும் மாகொல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் வழங்கிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பஸ் ஒன்றின் மூலம் கொலையாளி ஒருவரை மொனராகலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்போது, குறித்த பஸ் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் ஹோமாகமை குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.