திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை வழியாக பிக்மி(PickMe) அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சாரதிகளின் குற்றச்சாட்டின்படி, திருக்கோணமலை சாரதிகளுக்கு குறைந்த கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால் வருமான இழப்பு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக திருக்கோணமலையில் இருந்து சிகிரியா செல்ல ரூ.9,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிரியாவில் இருந்து திருக்கோணமலை வருவதற்கு ரூ.12,000 கட்டணம் அறவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ்குமார் கலந்துகொண்டு பிக்மி(PickMe) நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நிறுவனம்14 நாட்களுக்குள் உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வெளிப்பிரதேச வாகனங்கள் தொடர்பாக பிரதேச சபை முன்னர் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து ஏற்பட்ட சர்ச்சை தொடர்பிலும் பொலிஸார் இன்று விசாரணை மேற்கொண்டதுடன் அதற்கு தவிசாளரும் விளக்கமளித்துள்ளார்.