அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்தமாகவே அரசாங்கம் அவரசகால சட்டத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறினால், அதற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (9) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்து செல்லும் நிலையில் எதிர்வரும் ஜூன் மாதமாகும்போது அரச ஊழியர்கள், தனியார் துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு கோரி வீதிக்கிறங்கும் நிலை இருக்கிறது. இதனை அறிந்துகொண்டே ஜனாதிபதி 2027வரை சம்பள அதிிகரிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்திருந்தார்.
ஆனால் தேர்தல் காலத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு அதிகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அதற்கு மாற்றமான கருத்தை தெரிவித்து வருகிறார். ஏனெனில் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் காரணமாக சமூகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்று அனைத்து இடங்களிலும் பணி பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. சுகாதார துறையில் வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்புித்துள்ளனர். அதேபோன்று கல்வித்துறையில், மறுசீரமைப்பை கொண்டுவந்ததன் மூலம் பாரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அதேபோன்று மீனவ பிரஜைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்த பெரும்பாலானவர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் முரண்பட ஆரம்பித்துள்ளனர் என்பதை எங்களுக்கு காணக்கூடியதாக இருக்கிறது.
அதனால் இவர்கள் அரசாங்கத்துடன் மோதும் நிலை ஏற்படும்போது அதனை தடுப்பதற்காக அரசாங்கம் வெள்ளிக்கிழமை அவசகால சட்டத்தை மீண்டும் அனுமதித்துக்கொண்டுள்ளது. தித்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் நூற்றுக்கு 80வீதம் பூர்த்தி செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால் அவசரகால சட்டம் எதற்கு என கேட்கிறோம். தித்வா புயல் ஏற்பட்டபோது, அனைத்து துறைகளையும் முகாமைத்துவம் செய்துகொள்வதற்கான ஒரு விடயமாகவே இந்த அவசரகால சட்டம் தேவையாக இருந்தது. தற்போது அந்த நிலைமை முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் மேலும் அவசரகால சட்டத்தை நீடித்துக்கொண்டு செல்கிறது.
ஆனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீீடித்துக்கொள்வதற்கான காரணம் என்னவென்றால், எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்குள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்தமாகவே அரசாங்கம் அவரசகால சட்டத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறது.
அவசரகால சட்டம் தேவையில்லை, அவசரகால சட்டத்தை அடக்கு முறைக்கு பயன்படுத்துவார்கள் என எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தவர்கள் தற்போது எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடும் என அரசாங்கம் அச்சப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீடித்துக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
அதனால் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் அரசாங்கத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், அதற்கு எதிராக மக்கள் அணிதிறலுவார்கள். அதனை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது என்றார்.