சென்னை
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய முதலமைச்சர் விஜய் குறித்தும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வெளிப்படையாக மனம் திறந்து பேசினார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு:
“நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. தேர்தலில் அடைந்த தோல்வி நிரந்தரமானது கிடையாது. திமுகவின் எதிர்காலத்தைத் திட்டமிட நமக்குக் கிடைத்த அவகாசமாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல்விக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மூடி மறைக்கத் தேவையில்லை. ஊருக்கே வெளிச்சம் தரும் விளக்கின் கீழே உள்ள இருட்டைப் போல, நம்மிடம் இருந்த தவறுகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். நம் தவறுகளை நாமே முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும்.”
கசப்பான சீர்திருத்தங்கள்:
“தேர்தல் தோல்விக்குப் பிறகு 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அளித்த அறிக்கையின் படியே தற்போது கட்சியில் பல தீர்மானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்சி நிர்வாக அமைப்பில் செய்யப்படவுள்ள இந்த மாறுதல்கள் கடுமையானதாக, சிலருக்குக் கசப்பானதாகக் கூட இருக்கலாம்; ஆனால், கசப்பு மருந்துதான் உடலுக்கு நன்மை செய்யும். இனி இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் அறிமுகப்படுத்தப்பட்டுப் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். தேர்தல் மூலமாகத் தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.”
நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி:
“கொள்கை மற்றும் உழைப்பில் உறுதியாக இருப்பவர்கள் கூட, தொண்டர்களை அரவணைப்பதில் சறுக்கி விடுகிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலரும் முகம், சொந்தக் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வதில்லை; அவர்களை மதித்து வணங்குவது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் எப்படி இயக்கம் வளரும்? ஒரு எம்.எல்.ஏ அல்லது ஒரு மாவட்டச் செயலாளரை மட்டுமே வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிடவோ, வெற்றிபெறவோ முடியாது. ஒவ்வொரு தொண்டனும் நிர்வாகியாகச் செயல்படும் போதுதான் இயக்கம் வாழும்.”
சினிமா செட் அல்ல சட்டப்பேரவை – விஜய் மீது விமர்சனம்:
“தற்போதைய முதலமைச்சர் விஜய் நாம் கொண்டு வந்த திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதிலேயே மிகவும் பிஸியாக இருக்கிறார். சட்டப்பேரவையை ஏதோ சினிமா செட் என நினைத்துக்கொண்டு அங்கு பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாம் அப்படியல்ல; வெற்றியோ தோல்வியோ மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவர்கள். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல் மக்கள் நலனுக்காகச் செயல்படும் கட்சி திமுக.”
“கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்”:
“போர் அடிக்கிறது என்று நாம் அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்காகப் போராட வந்தவர்கள். நாம் ஆட்சியில் இருந்தபோது வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து நல்லாட்சி கொடுத்தோம்; இப்போது தோற்ற பிறகும் சொல்கிறேன், நமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துத்தான் நாம் போராடப் போகிறோம். ‘Comeback’ கொடுப்பதில் நாம் Specialist! விரைவில் மிகச் சிறப்பாக ‘கம்பேக்’ கொடுப்போம். நிர்வாகிகள் முதலில் தங்கள் வீட்டில், தங்கள் உறவினர்களிடம் அரசியல் பேசி அவர்களின் வாக்குகளை முழுமையாகப் பெற வேண்டும்,” என மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடையே எழுச்சியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்துவது, நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது உள்ளிட்ட 9 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
#MKStalin #DMK #ComebackSpecialist #DMKExecutiveCommittee #AnnaArivalayam #ChiefMinisterVijay #TVKGovernment #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates