சென்னை
தொகுதி மறுவரையறை மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிப் பல்டி அடித்துள்ளதாகத் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறையில் நிலைப்பாடு மாற்றம்:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதி மாறன், “நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளையும் அப்படியே ‘ப்ரீஸ்’ (Freeze) செய்ய வேண்டும் எனச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய், மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு ‘Fair Delimitation’ (நியாயமான மறுவரையறை) எனப் பேசுகிறார். இது அவர் பாஜகவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது,” என்று குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி குறிப்பிட்ட ‘எட்டப்பர்’ யார்?
“தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் விரோதிகள், எட்டப்பர்கள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். தற்போது அவரது கூட்டணிக் கட்சித் தலைவரான முதலமைச்சர் விஜய்யே நிலைப்பாட்டை மாற்றியுள்ள நிலையில், ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த ‘எட்டப்பர்’ யார் என்பதற்கு விஜய் விளக்கம் அளிப்பாரா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேகதாது விவகாரத்தில் மவுனம் ஏன்?
“தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், மேகதாது அணையைக் கட்ட வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளிப்படையாகப் பேசியபோதும், முதலமைச்சர் விஜய் அதனை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமைதி காத்துள்ளார். அரசியல் அனுபவமின்மையால் தவறான வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் தமிழ்நாட்டின் உரிமைகளை அவர் இழக்கக் கூடாது; தனது அரசியல் நிலைப்பாடு குறித்துத் தமிழ்நாட்டு மக்களுக்கும், திமுகவிற்கும் அவர் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்,” என்று தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.
#DayanidhiMaran #ChiefMinisterVijay #TVKGovernment #DMK #DelimitationIssue #MekedatuDam #AmitShah #RahulGandhi #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates