டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 500 லீற்றர் தொழில்நுட்ப மலாத்தியானை (Technical Malathion) இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிசாவிடம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா, செவ்வாய்க்கிழமை (04) அன்று கையளித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசாங்கமும் அதன் மக்களும் இலங்கையின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வழங்கிய அன்பளிப்பாக இந்த consignments (தொகுப்பு) வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு இந்திய நிறுவனமான UPL லிமிடெட் மூலம் வழங்கப்பட்டதுடன், கோரிக்கை விடுக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்தது. இது நெருக்கடி காலங்களில் இந்தியாவின் முதன்மைப் பதிலளிப்பாளர் (first responder) பங்கை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கையில் 2026ஆம் ஆண்டில் சுமார் 86,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுடிகளில் ஒன்றாகும். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த இலங்கையின் சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான புகைமூட்டம் மற்றும் தெளிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தத் தொழில்நுட்ப மலாத்தியான் ஆதரவளிக்கும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்க இலங்கைக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், இந்த விநியோகத்தை எளிதாக்குவதில் ஒத்துழைப்பு நல்கிய சுகாதார அமைச்சருக்கும் அனைத்து இலங்கை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான, மக்கள் மையப் பங்காளித்துவத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். மேலும், இது இந்தியாவின் ‘அயல்நாடுகளுக்கு முதலிடம்’ (Neighbourhood First) கொள்கைக்கான அதன் நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.