கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாசாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஆணைதந்திருந்தார்கள். ஆனால், ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது, இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவிக் காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதியின் “நாடே முதன்மை” மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டங்களின் கீழ் இந்த நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் 71 பயனாளிகளுக்கு சுமார் 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் செவ்வாய்க்கிழமை (28) திகதி மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஞா.சுகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டில் கடந்த 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட 71 பயனாளிகளில் 30 பேருக்கு 150,000ரூபா வீதமும் 17 பேருக்கு 100,000ரூபா வீதமும், 24 பேருக்கு 40,000ரூபா வீதமும் காசோலைகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் எஸ்.விநோராஜ், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் பிரிதௌஸ் நளிமி உள்ளிட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, வீடு அமைப்பதற்கென நிதிகளை நாங்கள் பங்களித்துக் கொண்டு வருகின்றோம். அதேவேளை, வீதி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஏற்ற விதமான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான மேம்பாடுகள், விவசாயம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கிராமங்களின் ஊடாக வளர்ச்சி செய்யக்கூடிய மக்கள் சக்தித் திட்டங்கள், மீனவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் என அனைத்து விடயங்களுக்கும் தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதிகளை வழங்கி வருகின்றது.
இதன் ஊடாக நமது பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அதுமட்டுமன்றி, சமூக நலத் திட்டங்களின் ஊடாக நமது மக்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற இந்த வேளையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் போதைப்பொருளுக்கு எதிராகவும், பாதாள உலகச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் இந்த அரசு தொடர்ச்சியாக அதனைத் தடுப்பதற்கும், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனை வழங்கும் விடயத்திலும் நேர்மையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு குற்றச்செயலிலும், பாதாள உலகச் செயல்பாடுகளிலும், இந்த போதைக் கலாச்சாரத்தை இந்த நாட்டில் உருவாக்கியவர்களிலும் மிக முக்கியமான பின்னணியாக இருந்தவர்கள் அந்த அரசியல்வாதிகள்.
உங்களுக்குத் தெரியும், அதோடு தொடர்புபட்ட பல விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது, இந்த அரசியல்வாதிகளைத் தான் இறுதியாக அந்த விசாரணை சென்று அடைகின்றது.
எனவே, இந்த விடயங்களில் சட்டம் இப்போது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல்துறைத் திணைக்களமாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்து வருகின்றார்கள். அது தொடர்பாக அவர்களுக்கு அச்சம் இருக்கலாம். அந்த அடிப்படையிலே இவர்கள் அரசை வீழ்த்துகின்ற ஒரு செயல்பாட்டை முன்னெடுப்பதாக எண்ணிக்கொண்டு, தங்களது இணைப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், இவை அனைத்துமே தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளுகின்ற ஒரு முயற்சியாகத் தான் இருக்கின்றது. இந்த இணைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அதோடு தொடர்புபட்டிருப்பவர்களை நாங்கள் எடுத்துக்கொண்டோமேயானால், நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அல்லது ஏதோ ஒரு குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர்கள் தான் இப்போது ஒன்றிணைந்து கொண்டு இந்த அரசை வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகின்றார்கள்.
ஆகவே, மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது அதிகமான நம்பிக்கை இருக்கின்றது. நீங்கள் தந்த மக்கள் ஆணையினை நிறைவேற்றுவதற்காக நாங்கள் நேர்மையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் நீங்கள் செயல்பட்டிருந்தீர்கள். அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் எங்களுக்கு ஆணையளித்திருந்தீர்கள். ஆனால், இந்த ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது, இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஆகவே, அரசு நிதியை நாங்கள் இப்போது சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த நிதிகளைக் கொண்டு உங்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
இன்னும் பல விடயங்களை நடைமுறைப்படுத்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காத்திருக்கின்றது. இப்போது எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் மூன்று ஆண்டு காலங்கள் இருக்கின்றன. ஆகவே, இன்னும் பல விடயங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கின்றோம்.
நாட்டில் புயல், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும் சரி, எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை ஏற்படும் போதும் சரி, ஏனைய நிலைமைகளிலும் சரியான முறையில் நாங்கள் எங்களைச் சமப்படுத்திக்கொண்டு அல்லது இந்தப் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.
இந்த நாட்டில் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க அவர்கள், அனைத்து விடயங்களிலும் மக்கள் சார்ந்ததாகவே எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இனவாத ரீதியாக, பிரதேசவாத ரீதியாக, மத ரீதியான எந்தவொரு பிரித்தாளும் கொள்கையையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்போதும் அனுமதிக்காது. அதற்கு எதிரானவர்களாகவே எப்போதும் இந்த அரசாங்கம் இருக்கும்.