னடிய அரசாங்கத்துடன் தொடர்புடையது போல் காட்டி, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு (Passport) இணையதளத்தை நடத்தியதாகக் கூறப்படும் யோர்க் பிராந்தியத்தைச் (York Region) சேர்ந்த இருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
“Passport Online” மற்றும் “Passport Express” ஆகிய பெயர்களில் இயங்கிய இந்த நிறுவனம், 2016 முதல் 2020 வரை வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலம் விரைவாகவும் எளிதாகவும் கனடிய கடவுச்சீட்டைப் பெறலாம் அல்லது புதுப்பிக்கலாம் எனக் கூறி “தவறான தகவல்களை” வழங்கியதாகக் கனடா போட்டிப் பணியகத்தின் (Competition Bureau Canada) புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைவான கடவுச்சீட்டு சேவைகளுக்காகத் தாங்கள் கனடா அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதாகக் கனடியர்களை இந்த இணையதளம் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது. ஆனால், இவை இரண்டுமே உண்மையல்ல என்று அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக யோர்க் பிராந்திய பொலிஸார் ஜூலை 22 அன்று ஜான் ஜெஸ்ஸி ப்ரெஸ்லின் (John Jesse Breslin) மற்றும் போப் ஹுய் டிங் வோங் (Phoebe Hui Ting Wong) ஆகியோரைக் கைது செய்தனர்.
இதில் ப்ரெஸ்லின் நிறுவனத்தின் உரிமையாளராகவும் முக்கிய முடிவுகளை எடுப்பவராகவும் இருந்ததாகவும், வோங் மேலாளராகப் பணியாற்றியதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
தவறான அல்லது வழிகெடுக்கும் தகவல்களைப் பயன்படுத்தி ஒரு சேவையை விளம்பரப்படுத்தியதற்காகப் போட்டிச் சட்டத்தின் (Competition Act) கீழ் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், $5,000க்கு அதிகமான தொகையை மோசடி செய்தல் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
“நுகர்வோரை ஏமாற்றுவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; கனடியர்கள் மோசடிகள் மற்றும் பிற ஏமாற்று வேலைகளால் தொடர்ந்து பணத்தை இழந்து வருகின்றனர்,” என்று இடைக்காலப் போட்டி ஆணையர் ஜீன் பிராட் (Jeanne Pratt) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். “கனடியர்களின் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பறிக்கத் தவறான வழிகளைக் கையாள்பவர்களைத் தடுக்க போட்டிப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.”
ரொறன்ரோ பொலிஸாரின் உதவி உடனும், கனடிய மோசடி எதிர்ப்பு மையம் (Canadian Anti-Fraud Centre) மற்றும் ‘பெட்டர் பிசினஸ் பீரோ’ (Better Business Bureau) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கனடா போட்டிப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.