டொராண்டோ, ஜூலை 22: கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள வர்த்தக மற்றும் குடியிருப்பு வளாகக் கட்டடமொன்றில் புகுந்து திருட முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, அக்கட்டடத்திலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலும் தீப்பற்றி எாிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்னடி வீதி (Kennedy Road) மற்றும் எக்ளிண்டன் அவென்யூ கிழக்குப் பகுதிக்கு (Eglinton Avenue East) அருகில் உள்ள கட்டடமொன்றில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வதாகத் (Break-and-enter) தெரிவிக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்குள், குறித்த கட்டடமும் அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் தீப்பற்றி எாியத் தொடங்கியுள்ளன. வணிக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள் இணைந்து இயங்கி வந்த இந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயைக் தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டுத் தணித்தனர்.
இச்சம்பவத்தில் எவருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 10 பேர் தற்காலிகமாக இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் பரிசோதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட மூவர் மருத்துவமனை சிகிச்சையை நிராகரித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய தீவைப்பு: இத்தீப்பற்றல் சம்பவம் திட்டமிட்டு வைக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய தீயாகக் (Suspicious fire) கருதப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கட்டடத்தின் தரைதளத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனம் ஒன்று தீக்கிரையாக்கப்படுவது இது இரண்டாவது முறை என அப் பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தின் காரணம், அது எவ்வாறு தொடங்கியது என்பது குறித்துக் கண்டறிய பொலிஸாரும் தீயணைப்பு அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை