உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும் உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவானது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் ஒருகட்சி சர்வாதிகார கட்டளை ஆட்சியை நிறுவுவதற்கான ஒரு முயற்சியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
பகிரங்க விரிவுரையில் உரையாற்றிய பிரேமதாச, இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலவீனப்படுத்துகிறது, நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது மற்றும் ஜனநாயகத்தை அழிக்கிறது என்று கூறினார்.
நிறைவேற்று அதிகாரக்கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்காமல் அரசாங்கம் ஏன் இந்தத் திருத்தத்தை மட்டும் முன்னெடுக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டபோது அமைச்சர்கள் இத்தகைய திட்டத்தை மறுத்ததாகவும் குறிப்பிட்டார்.
மக்னா கார்ட்டா (Magna Carta) மற்றும் இடைக்கால ஆங்கிலப் பொதுச் சட்டத்தில் இருந்து 1787 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசியல் அமைப்பு, 1948 ஆம் ஆண்டின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் மற்றும் 1985 ஆம் ஆண்டின் நீதித்துறை சுயாதீனம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் வரையிலான சர்வதேச முன்மாதற்சிகளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரேமதாச, அதிகாரப் பகிர்வு மற்றும் சோதனைகள்-சமநிலைகள் (checks and balances) மூலமே ஜனநாயகம் வலுப்பெறுகிறது என்று வாதிட்டார்.
நீதித்துறை எந்தளவுக்குச் சுயாதீனமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஜனநாயகம் பலமடையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஏனையோர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த போதிலும், சர்வாதிகார ஒருகட்சி ஆட்சியை உறுதிப்படுத்த உழைத்து மக்கள் ஆணையைத் துரோகம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எனத் தாம் அழைக்கும் இத்தகைய முயற்சிகளைத் தோற்கடிக்கக் கட்சி மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து பொதுமக்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களிடமிருந்து அழுத்தங்களைத் தூண்டலாம், பொருளாதாரச் சவால்களை உருவாக்கலாம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ போன்ற வரிச்சலுகைகளைப் பாதிக்கலாம் என்றும் பிரேமதாச எச்சரித்தார். இவைகளின் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறான நடவடிக்கைகள் மக்களின் சக்தியால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நீதித்துறையின் சுயாதீனம் சீர்குலைக்கப்பட்ட காலம் மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கக் கூடாது,” என்று பிரகடனப்படுத்திய பிரேமதாச, ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகிய இரண்டையும் பாதுகாப்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.