இலங்கை எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, ஜனநாயக ஐக்கிய எதிர்க்கட்சியின் (Democratic United Opposition) பிரதிநிதிகள் இன்று (15) ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்சை (Marc‑Andre Franche) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
“இலங்கையில் யாரும் இந்தச் சீர்திருத்தங்களைக் கேட்கவில்லை. சட்டத்துறை சமூகம், சிவில் சமூகம், நீதவான்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இதற்கு எதிராக உள்ளனர். அப்படியிருக்கையில் யாருடைய விருப்பத்திற்காக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சீர்திருத்தங்களின் தன்மை அல்லது நோக்கம் குறித்து அரசாங்கம் எந்தவொரு தெளிவான அறிக்கையையும் வெளியிடவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என விமர்சித்தார். 2021 இல் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த செயல்முறையை உதாரணம் காட்டிய அவர், அங்கு முடிவுகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு 1,200 க்கும் மேற்பட்ட பதில்கள் பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
விசேட வைத்தியர்கள் போன்ற பிற தொழில் வல்லுநர்களைக் கருத்தில் கொள்ளாமல், நீதிபதிகளின் பதவிக்காலத்தை மட்டும் நீடிப்பது பாரபட்சமானது என்றும், இது அரசியலமைப்பின் 12(1) பிரிவை மீறுவதாகும் என்றும் பீரிஸ் மேலும் தெரிவித்தார். “நாட்டின் அவசரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சுரேன் ராகவன், 10 அதிகாரிகள் உட்பட 33 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஐ.நா.வின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறினார்.
நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த போதிலும், சம்பவம் நடந்து பத்து நாட்கள் கடந்தும் இடைக்கால அறிக்கையோ அல்லது உத்தியோகபூர்வ அறிக்கையோ வெளியிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ரப்பர் தோட்டாக்கள் அல்லது கண்ணீர்ப்புகை போன்ற குறைந்தபட்ச பலப்பிரயோக முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறித்து ராகவன் கேள்வி எழுப்பினார். “சர்வதேச நடைமுறைகள் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தையே கோருகின்றன. அது ஏன் இங்கு பயன்படுத்தப்படவில்லை?” என்று கேட்டார்.
அரசாங்கம் தெளிவற்ற அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு மௌனம் காப்பதாக விமர்சித்த அவர், ஆளுங்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிமட்ட அரசியல் அனுபவம் இல்லாததால், கலாசார மற்றும் சமூக யதார்த்தங்களுக்குச் சரியாகப் பதிலளிக்கும் திறன் அவர்களுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மரணங்களைக் குறிப்பிட்ட ராகவன், சர்வதேச அளவிலும் ஐ.நா சபையினாலும் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையான ‘வாழும் உரிமையைப்’ பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிச் செல்வதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது” என்றார்.
சட்டத்தின் ஆட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் மற்றும் முறையான கல்வி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், அரசாங்கத்திடமிருந்து பொதுமக்கள் ஒரு ‘அமைப்பு மாற்றத்தையே’ (System change) எதிர்பார்த்தனர் என்பதை பீரிஸ் மற்றும் ராகவன் ஆகிய இருவருமே வலியுறுத்தினர். வன்முறைப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை நிராகரித்த அவர்கள், 21ஆம் நூற்றாண்டின் ஜனநாயகம் என்பது கலந்தாலோசனை, பங்களிப்பு மற்றும் மக்களின் குரலுக்குச் செவிசாய்த்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றனர்.
இறுதியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்த ராகவன், “இன்றைய ஜனநாயகம் என்பது கலந்தாலோசனையையும் பங்களிப்பையுமே குறிக்கிறது. நாட்டின் நலனுக்காகத் தலைமைத்துவம் இத்தகையதொரு ஜனநாயகக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கையும் அழுத்தமும் ஆகும்” என்று தெரிவித்தார்.